Monday, 3 July 2017

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4
(கேட்டுக்கொண்டிருந்த இளங்கோ)
அரசியலில்  நெறி தவறியோர்க்கு 
அறமே உயிர் நீக்கும் எமனாவதையும் 
புகழ் மிக்க பத்தினியை உயர்ந்தோர் போற்றுதலும்,
முன்செய்த வினையின் பயன்  பின்பிறவியில்  
சினத்துடன் வந்து சேரும் என்பதையும் 
இணைத்து வினைவந்து சேர்வதற்கு 
சிலம்பே காரணம் ஆவதால் 
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் 
யாம் பாட்டுடைய ஓர் செய்யுளைப் 
படைப்போம் என்றார்.
இக்காதை முடிமன்னர் 
சேர,சோழ, பாண்டியர் மூவர்க்கும் உரியது.
அடிகளே! நீங்களே அதைச் செய்தருளுக என்றார்.(சாத்தனார்)
..... அதற்கு அடிகளார் 


மங்கல வாழ்த்துப் பாடல், 
பெற்றோர் குடும்ப வாழ்வு நடத்தவிட்ட 
மனையறம்  படுத்த காதை
 நடன மங்கை மாதவி 
நடித்த அரங்கேற்று காதை,
அடுத்து அந்தி மாலைச் சிறப்புச் செய்த  காதை,
பூம்புகார் நகரில்  இந்திர விழா எடுத்த காதை
கடல் ஆடு காதை,
பூவிதழ் மலர்ந்த கடற்கரையில் பாடிய  கானல் வரி
 வேனில் காலம் வந்து பிரிவுத்துயரால் 
மாதவி துயருற்ற மாதவி இரங்கிய வேனிற் காதை
தீமை உடைய கனாத் திறம் உரைத்த காதை
பிறரை என்னென்ன என்ற  வினவச்செய்யும் 
நாடு காண் காதை,
அடுத்து காடு காண் காதை,
பின்னர் வேட்டுவ வரி
அடுத்து இதழ் விரிந்த மலர் சூடிய கண்ணகியை,
புறஞ்சேரியில் விட்டுச்சென்ற புறஞ்சேரி இறுத்த காதை
அடுத்து முழங்கும் இசையுள்ள 
ஊர் காண் காதை
அடுத்து அடைக்கலக் காதை
கொலைக்களக் காதை,
ஆய்ச்சியர் குரவை
தீமை நேரக்கேட்ட 
துன்ப மாலை
 நண்பகலையே  நடுங்கச்செய்த 
ஊர் சூழ் வரி
தொடர்ந்து சீர்மிக்க மன்னனோடு 
வழக்குரைத்த வழக்குரை காதை
 வஞ்சின மாலை , அடுத்து மதுரை மாநகர் 
தீக்கிரையான அழல் படு காதை
அதன் பின்னர் , அரும் தெய்வம் தோன்றிக்
கண்ணகியோடு உரையாடிய 
கட்டுரை காதையும்
பின்னர் அரும்பு அவிழ்ந்த 
மலர் சூடிய பெண்கள் நிகழ்த்திய 
குன்றக் குரவையும் என்று
இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து,  பின்னர்  வரம் தரு காதையோடு 
முப்பது காதைகளோடு 

இடையில் உரை வர  பாட்டு உடைச் செய்யுளை 
சொல்லிற் சிறப்புள்ள இளங்கோ அடிகள் அருள
மதுரைக்கூல வாணிகன் சாத்தனார் கேட்டார் 
இது, பகுப்பின் முறை  தெரிந்த பதிகத்தின் மரபு என்பர் 

No comments:

Post a Comment