Thursday, 3 August 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 7

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 7
மாநகர்க்கு அறிவித்த  திருமணம்

ஏற்றினர் மங்கல மங்கையரை,
யானை மீது நகரெங்கும் சுற்றித் 
திருமணச்செய்தி அறிவிக்க.
வந்தது திருமண நாள்.
ஒலித்தன முரசுகள்,
ஆர்த்தன மத்தளங்கள்;
முழங்கின சங்குகள் முறையே.
வெண்குடைகள் எழுந்தன 
வேந்தன் உலா வந்தது போல்.
ஊர்வலத்தில் தொடர்ந்தது மங்கல நாண்

   மாலைகள் தொங்கும் மண்டப உச்சியின் 
கீழே நீலப்பட்டினாலான விதானத்தின் 
அடியில் ஓர் முத்துப்பந்தலில் 
வானத்துச் சந்திரன் உரோகிணி 
நட்சத்திரத்தைச் சேரும் நல்ல நாளில் 
அருந்ததிக்கு நிகரான கண்ணகியோடு  
கைகோர்த்து முதிய அந்தணன் 
வேதநெறிச் சடங்குகள் நிகழ்த்த   
மணந்து தீயினை வலம் வந்த
காட்சியைக் கண்டோர் கண்கள் 
என்ன தவம் செய்தனவோ!  
அழகு மேனி மகளிர் நறுமணப் பொருள் ஏந்திவர 
மலர் ஏந்திய மங்கையர் தொடர 
கூச்சப் பார்வையோடு கோதையர் ,
நிமிர்ந்த கொங்கையர், சாந்து ஏந்தினோர் 
அகிற்புகை ஏந்தியோர், மாலை ஏந்தியோர்,
சுண்ணப்பொடி சுமந்தோர்,
அரும்பிய முறுவலுடன் விளக்கேந்தினோர் 
அணிகலன் ஏந்தினார்,
முளைப்பாலிகை ஏந்தினோர்,
பூரண கும்பம் சுமந்தோர் தொடர்ந்து வர 
பொற்கொடி போன்றோர் 
பொழுதோடு மலர்ந்த மலரணிந்த 
விரிகூந்தல் மகளிர் வாழ்த்தினர்;
"இவள் காதலனைப் பிரியாமல்,
இணைந்த கை  நெகிழாமல்
தீமை அற்று இருவரும்  நீடு வாழ்கவென 
வாழ்த்தி கண்ணகியை மங்கலப் 
படுக்கையில் ஏற்றினர்.
உடன் மன்னனையும் வாழ்த்தினர்;
சினம் பொங்கும் வீர வேல் ஏந்தி 
இமையத்துக்கு இப்பால் தன் 
புலிச்சின்னம் நட்டு எதிரிலா 
ஆணைச்சக்கரத்தை உருட்டும் 
எங்கள் செம்பியன் வாழ்கவென.[தொடரும்]







No comments:

Post a Comment