Monday, 10 July 2017

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6

சிலப்பதிகாரம் [புதுக்கவிதை வடிவில் ] 6
-------------------------------------------------
புகார்க் காண்டம்
---------------------------------------
1. மங்கல வாழ்த்துப் பாடல்
-------------------------------------------------
போற்றுவோம் வெண்ணிலவை;
போற்றுவோம் வெண்ணிலவை
பூந்தாது சிந்தும் மலர்மாலை அணிந்த    மன்னனின்
குளிர் வெண்குடை போல் ,அழகிய உலகைக்
கருணையோடு காப்பதால் ,
போற்றுவோம் கதிரவனை; போற்றுவோம் கதிரவனை
காவிரிநாடனின் ஆணைச் சக்கரமாய்
பொன்சுடர் வீசும்  மேருமலைச் சிகரத்தை
வலம்  வந்து  உலகைச் சுற்றிவருவதால்
போற்றுவோம் மாண்புள்ள  மழையை :
போற்றுவோம் மாண்புள்ள  மழையை
அச்சுறுத்தும் கடல் சூழ்ந்த உலகை
சோழனின் கருணை போல்
சூழ்ந்து நின்று பெய்து காப்பதால்
போற்றுவோம் பூம்புகாரை;
போற்றுவோம் பூம்புகாரை;
பெருகும் நீர்வேலியாகி  நின்று
உலகைக்காக்கும் கடல் போல்
சோழன் குலத்தோடு புகழ்
ஓங்கி விளங்கி வருவதால்

 பொதிகையே ஆனாலும் இமயமே  ஆனாலும்
போவதை நீக்கி நகர் துறந்து அறியாத
பழங்குடி மாந்தர் வாழும்
பொதுமைவுணர்வுள்ள புகார் நகரே ஆயினும்
அழிவற்ற நிலைபேறு உள்ளவை அவையென நிறுவி
மறுப்போ  மாறுதலோ கூறார்
முடிந்த மெய்யுணர்வை முழுவதும் அறிந்த உயர்ந்தோர்;
ஆகவே,
நாகலோகத்துத் தலைநகரொடும், நாகநாட்டோடும்
நிகரான போகமும், நெடிய புகழும் கொண்ட புகார் நகரில்,
வான் மழை போன்ற வள்ளன்மை கொண்ட மாநாய்கன்
குலக்கொம்பின் அருளினால் தோன்றிய கொடி போன்றவள்
பன்னிரண்டாண்டு வயதுள்ளவள் குறைவில்லா அழகுள்ள
திருமகளின் புகழ்மிக்க வடிவுள்ளவள் என்றும்
தீமையற்ற அருந்ததியின் கற்பு த்திறன் இவள் திறன் என்றும்
புகாரின் பெண்மக்கள் போற்றும்,   பெருங்குணத்தை விரும்புகிற
கண்ணகி என்னும் பெயர்கொண்டவள்  ;

செந்தாமரையில் வீற்றுள்ள லக்ஷ்மியின் புகழ் மிக்க
வடிவம் கொண்டவள் என்றும்
தீமையற்ற  அருந்ததி  நட்சத்திரத்தின் ஆற்றல் இவள் ஆற்றல் என்றும்
புகாரின்  மக்கள் தொழுது போற்றும்
விரும்பத்தக்க உயர்ந்த குணங்களை நேசிப்பவள்
கண்ணகி என்ற பெயர் கொண்டவள் என்பவளுக்கும்

பெரு நிலம் முழுவதையும்  ஆளுகின்ற மாமன்னன்
தலைமைக்குடிகள் என்று ஒதுக்கி வைத்த
ஒரு தனிச்சிறப்புள்ள  குடிகளோடு உயர்ந்து
ஓங்கி வளரும் செல்வவளம் பெற்றவனும் ,
வருகின்ற செல்வத்தையெல்லாம் பிறர்க்கு வழங்குவோனும்,
சங்க நிதி, பதும நிதி என்ற  இருநிதியுமுடையோனான
 மாசாத்துவான் என்பவனின் மகனும், பதினெட்டு வயதுள்ளவனும்,;

பூமியைத் தேய்க்கும் புகழ் கொண்டவனும்
இசைவென்ற சொல்லினோரும்
நிலவுமதி முகமுமுள்ள பெண்களின்
பெண்களின் கூட்டத்தில் நம் கண்கள் கா ணும்
முருகன் என்று புகழ்ந்து அவனைக்
காதலோடு  போற்றும் சிறப்புடைய
கோவலன் என்ற பெயர் கொண்டவனுக்கும்

ஒரு நல்ல நாளில் திருமணம் செய்விப்பது என்று
இரு குடும்பத்தலைவரும் மகிழ்ச்சியோடு முடிவெடுத்து
மங்கலம் கூறும் மகளிரை யானை மீதேற்றி
மாநகருக்குச் செய்தி அறிவித்தனர் 

Thursday, 6 July 2017

சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5

சிலப்பதிகாரம்(புதுக்கவிதை வடிவில்)-5
-------------------------------------------------------------------
உரைபெறு கட்டுரை
--------------------------------------------------
பாண்டிய நாடு கண்ணகியால் 
எரிக்கப்பட்ட அன்று முதல் 
மழை வளம் குன்றி 
வறுமையுற்றது , வெப்பு நோயும் 
கொப்புளமும் மக்களைத் தொடந்தன,
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்,
பொற்கொல்லர் ஆயிரம் பேரைக் கொன்று 
கண்ணகிக்குக்களப்பூசை செய்து 
விழா எடுத்து சாந்தி செய்ய,
நாடு நிரம்பிய  மழை பெய்தது;
நோயும், துன்பமும் நீங்கியது 

 அது கேட்டறிந்து கொங்கு மண்டலத்து 
 இளங்கோக்களான கோசர்கள் 
 தம் நாட்டிலும் கண்ணகிக்கு 
 விழா எடுத்து சாந்தி செய்ய
 பெய்யும் மழையும்,தொழிலும் 
 மாறாதாயின. 

அது அறிந்த  கடல் சூழ்ந்த  இலங்கையின் 
மன்னன் கயவாகு கண்ணகிக்கு
நாள் தோறும் வழிபாடு காண 
பலிபீடம் உள்ள கோயில் அமைத்து
'துன்பம் துடைத்து கோரிய 
வரம் தருபவள் இவள்' என
உறுதி கூறி ஒவ்வோர் ஆண்டும் 
ஆடி மாதத்தில் அங்கே ஒரு   
பெரு விழாவினை பலமுறை எடுப்பித்தான்.
அங்கு மழை நிலைத்து நின்று பெய்தது; 
பல வளங்கள் பெருகி(இலங்கை)
தவறாத விளைச்சல் உள்ள நாடானது 

அதைக் கேள்வியுற்று சோழன் பெருங்கிள்ளி
உறையூர்அரசவையில் 'எவ்வகையாலும் வரம் தரும் 
இவள் ஒரு பத்தினிக் கடவுள் ' என்று அறிவித்து 
கண்ணகிக்குப் பத்தினிக் கோயில் அமைத்து 
நாள்தோறும் விழாவும், பூசையும் நிகழச்செய்தான் 



Monday, 3 July 2017

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4

சிலப்பதிகாரம்[ புதுக்கவிதை வடிவில்]-4
(கேட்டுக்கொண்டிருந்த இளங்கோ)
அரசியலில்  நெறி தவறியோர்க்கு 
அறமே உயிர் நீக்கும் எமனாவதையும் 
புகழ் மிக்க பத்தினியை உயர்ந்தோர் போற்றுதலும்,
முன்செய்த வினையின் பயன்  பின்பிறவியில்  
சினத்துடன் வந்து சேரும் என்பதையும் 
இணைத்து வினைவந்து சேர்வதற்கு 
சிலம்பே காரணம் ஆவதால் 
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் 
யாம் பாட்டுடைய ஓர் செய்யுளைப் 
படைப்போம் என்றார்.
இக்காதை முடிமன்னர் 
சேர,சோழ, பாண்டியர் மூவர்க்கும் உரியது.
அடிகளே! நீங்களே அதைச் செய்தருளுக என்றார்.(சாத்தனார்)
..... அதற்கு அடிகளார் 


மங்கல வாழ்த்துப் பாடல், 
பெற்றோர் குடும்ப வாழ்வு நடத்தவிட்ட 
மனையறம்  படுத்த காதை
 நடன மங்கை மாதவி 
நடித்த அரங்கேற்று காதை,
அடுத்து அந்தி மாலைச் சிறப்புச் செய்த  காதை,
பூம்புகார் நகரில்  இந்திர விழா எடுத்த காதை
கடல் ஆடு காதை,
பூவிதழ் மலர்ந்த கடற்கரையில் பாடிய  கானல் வரி
 வேனில் காலம் வந்து பிரிவுத்துயரால் 
மாதவி துயருற்ற மாதவி இரங்கிய வேனிற் காதை
தீமை உடைய கனாத் திறம் உரைத்த காதை
பிறரை என்னென்ன என்ற  வினவச்செய்யும் 
நாடு காண் காதை,
அடுத்து காடு காண் காதை,
பின்னர் வேட்டுவ வரி
அடுத்து இதழ் விரிந்த மலர் சூடிய கண்ணகியை,
புறஞ்சேரியில் விட்டுச்சென்ற புறஞ்சேரி இறுத்த காதை
அடுத்து முழங்கும் இசையுள்ள 
ஊர் காண் காதை
அடுத்து அடைக்கலக் காதை
கொலைக்களக் காதை,
ஆய்ச்சியர் குரவை
தீமை நேரக்கேட்ட 
துன்ப மாலை
 நண்பகலையே  நடுங்கச்செய்த 
ஊர் சூழ் வரி
தொடர்ந்து சீர்மிக்க மன்னனோடு 
வழக்குரைத்த வழக்குரை காதை
 வஞ்சின மாலை , அடுத்து மதுரை மாநகர் 
தீக்கிரையான அழல் படு காதை
அதன் பின்னர் , அரும் தெய்வம் தோன்றிக்
கண்ணகியோடு உரையாடிய 
கட்டுரை காதையும்
பின்னர் அரும்பு அவிழ்ந்த 
மலர் சூடிய பெண்கள் நிகழ்த்திய 
குன்றக் குரவையும் என்று
இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து,  பின்னர்  வரம் தரு காதையோடு 
முப்பது காதைகளோடு 

இடையில் உரை வர  பாட்டு உடைச் செய்யுளை 
சொல்லிற் சிறப்புள்ள இளங்கோ அடிகள் அருள
மதுரைக்கூல வாணிகன் சாத்தனார் கேட்டார் 
இது, பகுப்பின் முறை  தெரிந்த பதிகத்தின் மரபு என்பர்