Tuesday, 27 June 2017

சிலப்பதிகாரம் -புதுக்கவிதை வடிவில் .1

சிலப்பதிகாரம் -புதுக்கவிதை வடிவில் .1
-------------------------------


நான்  சிலப்பதிகாரத்தை  நாவல் வடிவில்எழுதும்முயற்சி தொடங்கி சிறிது காலமாயிற்று. அதற்கு முன்னர்  இக்காப்பியத்தை யாவரும் எளிதில் சிரமப்படாது உரையின் துணையின்றி  அறியும் வண்ணம் எளிய தமிழில்  சுவைக்க வேண்டுமென்று, புதுக்கவிதை ஆக்குவது முன்னோட்டமாக இருக்கும் என்ற கருத்தில் 
காப்பியம் முழுவதையும் எளிய கவிதை வடிவாக்குகிறேன் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள் என்ற என் பணிவான வேண்டுகோளை மதித்து வந்த பதில்கள் சில:-  
*பிற மொழிகளில் செவ்விலக்கியங்களை எளிய, அன்றாட மொழியில் அறிமுகப்படுத்தும் முயற்சிகள் ஏராளம்.குறிப்பாக, பழைய எழுத்து பாணியை புரிந்துகொள்ள இயலாத அல்லது சிரமப்படுகிற வர்களுக்கு, இளைய தலைமுறையினருக்கு அது ஒரு படிக்கல். அதன் வழியாக அவர்கள் அந்தந்த மூல நூலை  அடுத்த கட்டமாக சென்றடைய முடியும்.
அந்த வகையில் சிலப்பதிகாரத்தை எளிய, புதுக் கவிதை நடையில் அறிமுகப்படுத்துவது போற்றப்படும்
 *முயற்சியாக இருக்கும்.வாழ்த்துக்களும் வழித்துணையும்.செய்யுங்கள் ஐயா!நான் மிக ஆவலாய் எதிர் நோக்குகிறேன்.ஆனாலும் அது சவாலான பணிதான்.வாசிப்பவர் ஒவ்வொருவரும் மூலப் படைப்புடன் ஒப்புநோக்கி கருத்துச் சொல்வார்கள்.மனந்தளர்ந்து விடாதிருக்க வேண்டும்.அதுசரி.இதை நான் போய் உங்களுக்குச் சொல்வதா?படைப்புத்துறையில் பொன்விழா காண்கிறீர்கள்.தங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!
*நல்ல முயற்சி. தொடங்குங்கள்
 *சிலப்பதிகாரத்தை எளிய நடைமுறை தமிழில் தற்கால உவமானங்களுடன் உடைய விளக்கங்களை படிக்க ஆவல். பத்திரிகையில்  வரும் கவிதைகளை படித்து படித்து ஒவ்வாமை எற்பட்டுள்ளது"
கருத்துக்கக்கும்,அனைவருக்கும்  இதய பூர்வமான சிநேக நன்றி கூறி வணங்குகிறேன். 
ஒரு வாக்குமூலம்.
------------------------------------
என் முயற்சி ஒரு எளிய தொடக்கமே ! மாபெரும் புலவோரும் , மகா பண்டிதர்களும் நிறைந்த தமிழ் கூறும் நல்லுலகில்  குற்றங்குறைகள் காணக்கூடியதே! நோக்கம் மிக எளியது.நேர்மையானது . காப்பியங்களை, எளிய தமிழறிவு மட்டுமே உள்ளோரிடம் , அவர்கள் கைக்குக்கிடைக்கச்செய்யவேண்டும். அமுதத்தேன் கூடத்தில் ஓரிரு தேன்துளியாவது தமிழறிந்த அனைவரும் பருக வழிசமைத்தலே.
------------------------------------------------------------------------------------------------------------------------
                         பதிகம் 
                     -----------------
அரசு வேண்டாமென மறுத்தவர்,  
சேர இளவரசர் இளங்கோ .
அருகர் கோயில் குணவாயிலில்  
அவர்அமர்ந்திருந்தபோது 
குன்றில் வாழும் குறவர்கள்  
ஒன்று கூடிவந்து 
கூறினர்  ஒரு செய்தி
"பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில், 
அதன் குளிர்நிழலில் நின்றாள் 
ஒரு முலை இழந்த திருமாபத்தினி ;
வானிலிருந்து இறங்கிய 
அமரர்கோனின் அவையினர் 
அவளது கணவனை அவளுக்குக்  காட்டவும்
அவனுடன்எங்கள் கண்முன்னே அவள் விண்ணகம் 
சென்றதைக் கண்டு வியந்தோம்" என்றனர். 
அவரோடு இருந்த குளிர்தமிழ்கூறும்  சாத்தனார் 
நான் அறிவேன் அது ஏன் நேர்ந்ததென 
உரைக்கத்தொடங்கினார் [தொடரும்]
------------------------------------------ 
மூலம் 

சிலப்பதிகாரம்

பதிகம்
(இணைக் குறளாசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீஎன-
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

யான் அறிகுவன் அது பட்டதுஎன்று உரைப்போன்,
ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுஉற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு 20

மன்பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட
கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க‘ - என்று ஏகி
பண்டு தான் கொண்ட சில் அரிச் சிலம்பினைக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கைஎன
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், ‘அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு‘ - என 30

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடுஉற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்என-
வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
வினை விளைவு?’ என்ன - விறலோய்! கேட்டி:
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் 40

வெள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி,
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்என
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்என 60

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,

அடிகள்! நீரே அருளுகஎன்றாற்கு அவர்,

’-இதன் நாவல் வடிவினை அடுத்து காண்க
0

1 comment:

  1. எளிய நடை ...புதியமுயற்சி

    ReplyDelete